Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: பஞ்சாப் மாநிலத்தில், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த .டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை(பி.எஸ்.எப்.,) தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டதுடன், உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூரின் ஹதுசைன்வாலா எல்லை பகுதியில், பாகிஸ்தானுக்கு சொந்தமான .டிரோன் ஒன்று, நேற்று(அக்.,7) இரவு பறந்து கொண்டிருந்தது. இரவு 10 முதல் 10.40 மணிக்குள் பல முறை பறந்த இந்த .டிரோன் 12.15 மணியளவில், இந்திய எல்லையை தாண்டி வந்தது.
இதனையறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் , உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து பஞ்சாப் போலீசார், உளவுத்துறையினர், பிஎஸ்எப் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த .டிரோன் மூலம் பயங்கரவாதிகளுக்கு, ஆயுதம் வழங்க முயற்சி ஏதும் நடந்ததா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், .டிரோன்கள் மூலம், பாகிஸ்தான் ஆயுதங்களை வீசி விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் ஒரு .டிரோன் இவ்வாறு செய்ததை கண்டறிந்த பிஎஸ்எப் வீரர்கள், மற்றொரு .டிரோன் எரிந்த நிலையில் கண்டெடுத்தனர்.
இதனையடுத்து, வான்வெளி மூலம், ஊடுருவ முயற்சி செய்யும் பாக்., சதியை முறியடிக்கும் வகையில், தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என ராணுவத்திற்கும், பி.எஸ்.எப்., வீரர்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.